ஞாயிறு, 20 டிசம்பர், 2015

Posted by விகாரன் On 1:36 AM



லண்டன்காரர் அறிமுக நிகழ்வில் நடைபெற்ற பிரதிமீதான “விமர்சனம்” எனும் அபிப்பிராய முன்வைப்பு மீதான நான் முன்வைத்த கருத்தினை சாரம் செய்ய முற்படுகின்றேன்.

லண்டன்காரர் மீதான என்னுடைய  அபிப்பிராயத்தினை சனவரியில் வெளிவர இருக்கும் புதிய சொல் இதழில் பதிவு செய்துள்ளேன். அதில்
சமீப நாட்களாக விமர்சனம் என்ற சொல்லின் மீது அதன் பிரயோகத்தில் இருக்கும் அதிகார தொரணை பற்றியும் உடன்பாடற்ற தன்மை என்னிடம் இருக்கிறது. தன்னுடைய முழுமையை  ஒட்டுமொத்தமாக்கி  ஒரு பிரதியை ஆக்குபவனின்மீது அது பிழை இது சரி என்று வாளெடுத்து வெட்டுவது எந்தளவு சரியான செயல் என்பது என்னுடைய கேள்வி. காலம் காலமாக விமர்சனம் என்ற பெயரில் நக்கீரர் தொடங்கி  “நெற்றிக்கண் திற்ப்பினும்” என்று ஆரம்பிக்கின்றோம்
 என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தேன்.

சமீப காலமாக மொழியில் இயங்கும் சில இலக்கிய துறைசார் சொற்களின் மீது கேள்வி எழுப்பத்தொடங்கி இருக்கிறது புதிய சொல் முதலான இதழை மையம் கொண்ட எழுத்துக்கள் .
 குறிப்பாக

விமர்சனம்
படைப்பு
படைப்பாளி
எழுத்தாளர்

முதலான சொற்களின் அர்த்தம் , சாத்தியம் , அதிகாரம் , இயங்குமுறைமை முதலானவற்றின் மீது தர்க பூர்வமான கேள்விகளை கேட்க ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக பின்னை மொழிச்சூழல் இந்த சாத்தியப்பாடுகளை மேற்கொள்வதில் முன்னனி வகிக்கின்றது.
பின் அமைப்பியல் , பின் நவீனத்துவம் , பின்னை மொழிச்சூழல் முதலான வியாக்கியானப்பரப்புகளின் தொடர்ச்சியான வாசிப்பும் விவாதங்களும் “சொற்களின் அதிகாரம்” என்பதனை போட்டுடைத்து அவற்றின் அதிகார மையத்தினை வலுவிழக்கச்செய்யும் முயற்சியை தொடங்கி இருக்கின்றன. 

இந்த பின்னனியில் தான் நேற்றையதினம் அனோஜன் பாலகிருஷ்ணன் , கெளதமி , கலையரசன் த , மூவரும் தம் கருத்தாடல்களை முன் வைத்த பின் கிரிஷாந் , ஜேசுராசா முதலானோர்  மூவரின் விமர்சனங்கள் என்ற தொனிக்கு கீழ் முன்வைக்கப்பட்ட அபிப்பிராயங்கள் மீது பல திசைக்கேள்விகளை எழுப்பியதோடு தம் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து நான் விமர்சனம் என்று சொல்லப்படும் அப்பிராய உருவாக்கத்தின் மீதுள்ள அதிகார தொனியினை நொக்கிய என் கருத்தாடலை முன் வைத்தேன் . அதனை சற்றே தெளிவாகவும் சுருக்கமாகவும் கீழே விளக்க முற்படுகின்றேன்.

விமர்சனம் என்பது தற்போதய தமிழ்ச்சூழலில்( பனுவல் , சினிமா , இசை , ஓவியம்ம் , நடனம் இலக்கியம் யாவற்றின் மீதும் ) பெருவாரியாக எத்தகைய தன்மையினதாக புரிந்துகொள்ளப்படவும் , முன்வைக்கப்படவும் படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கின்றேன்.

சாரு நிவேதிதாவின் ஸுரோ டிகிரி என்ற பிரதியின் மீது ஒரு பிரபல இணயப்பதிவர் ஒருவர் தன்னுடைய “விமர்சனம்” என்பதில்
“சாருவின் புத்தகத்தை மேசையில் வைத்திருந்தேன் தவறுதலாக கை தட்டுபட்டு  அருகில் இருந்த குப்பைகூடைக்குள் வீழ்ந்துவிட்டது.அப்படியே விட்டுவிட்டேன் ”

இத்தகைய வகையறா விமர்சனங்களையே நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் , இவற்றையே விமர்சனம் என்கின்றோம் , சாருவின் பிரதியை சொல்லிவிட்டேன் என்பதற்காக சாருவை நல்ல விமர்சகர் என்று சொல்வதற்கில்லை , தமிழின் மொசமான அதேநேரம் மொழித்தந்திரம் மிக்க “விமர்சகராக” சாருவையே முதலில் சொல்வேன்.  

இங்கே நான்  இரண்டு வகையான விமர்சகர் கூட்டத்தினை இனம்காண்கின்றேன்,
1.   பிரதியை தொட்டும் கூட பார்க்காமல் , எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை , அவர் பற்றி கேள்வியுற்ற கர்ண பரம்பரைக்கதைகள் , அல்லது பிரபலம் ஒன்றின் கருத்து , எழுத்துச்சண்டித்தனம் என்பவற்றின் வழியே எழுதித்தள்ளும் கூட்டம்.
2.   பிரதியை வாசித்தாலும் பிரதியின் விரிந்து செல்லும் சாத்தியங்களை , புறக்கணித்தல் , தம் வாசிப்பு செருக்கு, விவாத மனப்பாங்கு , அறிவு வன்முறை  என்பவற்றை விமர்சனம் என்ற பெயரில் நிகழ்த்துதல்.

இங்கே முதலாவது வகையறாக்களை  உளவியல் சிக்கல்களை தீர்க்கும் மருத்துவர்களுக்கு பரிந்துரைத்துவிட்டு இரண்டாவது வகையறாக்களை எடுத்துக்கொள்வோம்,

சாருவையே எடுத்துகொள்வோம் சாரு அடிக்கடி புலம்பித்தள்ளும் ஒருவிடயம் தமிழில் ஏன் உலகதரமான இலக்கியங்கள் எழுதப்படுவதில்லை , ஆல்பர்காம்யுவும் , மார்வெஸ்சும்  ஏன் தமிழ்ச்சூழலில் பிறப்பதில்லை என்று , அவரிடம் நான் கேட்கும் முதல் கேள்வி
“உங்களால் ஏன் ஓர் உலக இலக்கியத்தைஎழுத முடியவில்லை ?”
எழுதும் ஒவ்வொருவரிடமும் , இதே கேள்வியை கேட்கவேண்டும் , தமிழ்ச்சூழல் நல்ல இலக்கிய சாத்தியங்களை எல்லாக்காலங்களிலும் ஏற்படுத்தியிருக்கின்றது , மிகச்சிறந்த இலக்கியங்கள் எழுதப்படுகின்ற, ஆனால் அவை  எப்படி வியாக்கியானம் செய்யபடுகின்றன , ஒரு எழுத்தர் அடுத்த கட்டத்திற்கு செல்லும்வகையில் நாம் அவருடைய எழுத்த எவ்வளவு தூரம் விவாதித்து இருக்கிறோம் , தமது பிரதியின் மீது எழுத்தர் எத்தனை பேர் மோகமற்று தம் பிரதியையே வெளியே வந்து விமர்சித்து இருக்கின்றனர் ?

விமர்சனத்தை பிரதி வாசிப்புக்கான சாத்தியப்பாட்டிற்கு ஏன் எடுத்துச்செல்வதில்லை , கோபமாகவும் , மற்றவனை முட்டாளெனவும் , பிரதி மலத்திற்கு ஒப்பானது எனவும் சொல்லிக்கொள்ளுவது வன்முறையா விமர்சனமா ?

முழுமை என்பது இறந்த ஒன்றாகும் என்பார் ஓஷோ , முழுமையற்ற ஒன்றே பிரதி , அது வளர்ந்து செல்லும் , இன்னொன்றினை உருவாக்கும் சாத்தியங்களை சொல்லிக்கொடுக்கும் அதன் அளவில் நிறைந்து மீதி வெளியே வழிந்து இன்னொன்றை நிரப்பும் , பிரதி மையமற்ற தளம்பும் நீர்ப்பரப்பாக மாறுவதனை விமர்சனங்களே சாத்தியப்படுத்த வேண்டும்.
மோசமான விடயமொன்றை ஒரு பிரதி கொண்டுவரும் பொது அதனை மோசமானது என்று தவிர்கலாம் , வில்லங்கத்துக்கு அதனை பிரதி என்று சொல்லி எடுத்து பின்னர் அதனை ஏன் போட்டு வெட்ட வேண்டும் , மோசமான பிரதியை விட மோசமானது அது , மோசமானவற்றை புறக்கணிக்கவும் , நல்லபிரதிகளை வியாக்கியானம் செய்யவும் எப்போது கண்டுகொள்ளப்போகின்றோம் ?
சோகம் என்னவெனில் இத்தனை காலமும் விமர்சனம் என்ற ஒரு சொல்லை ஒரு வன்முறை கருவியாக , நஞ்சாக , பழிதீர்க்கும் அரக்கச்சொல்லாக , மாற்றிவிட்டோம் என்பதே .

இப்போது அச்சொல்லை மீள்வாசிப்பு செய்ய முடியாது அது நஞ்சாகி  எல்லா இலக்கிய பிரக்ஞைகளின் மீதும் அதன் நச்சுவாசம் பட்டாகி விட்டது , எனவே அதன் அதிகாரத்தை தோற்கடிக்க பிறிதோர் சொல்லை காத்திரமான அப்பிராய முன்வைப்பினை தர்க்கிக்கப்பட்ட அறச்சொல்லை , விமர்சனம் என்ற சொல்லின் எதிரில் , அதன் அதிகாரத்தின்  எதிரில் நிறுத்துவது தற்போதைய மொழி இலக்கியச்சூழலில் கடமையாகும்.


-யதார்த்தன் -

2 கருத்துகள்:

  1. சத்திமான வார்த்தைகள் ...
    "விமர்சனம் " ஒரு வன்முறைச் சொல்லே.

    பதிலளிநீக்கு
  2. > சாரு நிவேதிதாவின் ஸுரோ டிகிரி என்ற பிரதியின் மீது ஒரு பிரபல இணயப்பதிவர் ஒருவர் தன்னுடைய “விமர்சனம்” என்பதில்
    “சாருவின் புத்தகத்தை மேசையில் வைத்திருந்தேன் தவறுதலாக கை தட்டுபட்டு அருகில் இருந்த குப்பைகூடைக்குள் வீழ்ந்துவிட்டது.அப்படியே விட்டுவிட்டேன் ”

    ------------

    அதை அவர் "விமர்சனம்" என்று நக்கலாகக் கூறியிருக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு