வியாழன், 30 ஏப்ரல், 2015

Posted by விகாரன் On 6:32 AM


எது வரவே கூடாதென்று நேர்ந்திருந்தேனோ அது எனக்கும் வந்துவிட்டது.எலோரும் அதன் பெயரைச்சொல்வதைக்கூட தவிர்த்துவந்தார்கள் . தெய்வ நம்பிக்கை மீது எழுதப்பட்ட நோய் அது . கோடை வெயிலின் வெம்மை முகாம்களின் தறப்பால் கூடாரங்கள் மீது காய்ந்தது.வெய்யில் வலுக்க வலுக்க ஒவோரு நாளும் பலர் பூவரசங்குளம் வைத்திய சாலைக்கு ஏற்றப்பட்டனர்.

பூவரசங்குளம் வைத்திய சாலை நலன்புரி முகாம்களில் பெரியம்மை வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.எல்லா முகாம்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் அங்கே வந்து கொண்டிருந்தனர்.உடல் முழுவதும் கொப்பளங்களும் எரிச்சலும் வேதனையும் அங்கே இயல்பான ஒன்றாய் மாறிக்கிடந்தது.

எனக்கு உடலில் அவ்வளவாக கொப்பளங்கள் போடவில்லை .உடலில் நான்கைந்து கொப்பளங்கள் சிறிய அளவில் போட்டு உடைந்து காய்ந்து போயிருந்தன .கைகளில் ஒன்றிரண்டு சிறிய கொப்பளங்கள் அவ்வளவு தான்.

பெரிய ஓலை கொட்டகைகள் போட்டு நிலத்தில் ஏராளம் நோயாளர்கள் பன்றி குட்டி போட்டது போல் வெப்பம் இலை படுக்கையில் சுருண்டு கிடந்தனர் .என்னால் அந்த இடத்தில் இருக்கவே முடியவில்லை . ஒவ்வொருதரின் கோப்பளங்களையும் அவர்கள் அலறும் முனகும் வலியோசைகளையும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை எனவே வெளியே வந்து அலைந்து திரிவேன்.

இன்னும் ஒரு சில நாட்களில் என்னை முகாமிற்கு அனுப்பி விடுவார்கள் என்று எனக்கு தெரியும்.அன்றும் அப்படித்தான் வைத்திய சாலைக்கு பக்கத்தில் இருந்த பாடசாலை மைதானத்தில் கிரிகெட் பார்த்து கொண்டிருந்து விட்டு அங்கிருந்த வேப்ப மரத்தில் ஏறி வேப்பம் குழைகளை முறித்துக் கொண்டேன் .என் படுக்கைக்கு பக்கத்தில் இருக்கும் பெரியவர் ஒருவருக்காக அந்த குழைகளை முறித்தேன். பெரும்பாலும் அந்த வைத்திய சாலையை சுற்றி உள்ள அனைத்து வேப்ப மரங்களும் மொட்டையடிக்கப்பட்டு விட்டன. கொப்பளங்களின் வலியையும் எரிச்சலையும் வேப்பங்குழை இல்லாவிட்டால் சமாளிப்பது பரமபிரயத்தனம் .

குழையை முறித்துக் கொண்டு வைத்திய சாலையின் கழிப்பிட தொகுதிகள் இருந்த பக்கமாய் நடந்து வந்து கொண்டிருந்தேன்.அப்போது ஒரு வயதான பெண்மணி பெரிய குரலில் யாரையோ திட்டி கொண்டிருந்தாள்.

“உந்த குமரியளுக்கு வேற வேலையில்லை எல்லாதையும் கழட்டி பிற்றுக்க போடுறாளவை .எல்லாம் அடைச்சு போய் கிடக்கு ”

என்று அந்தம்மா திட்டி கொண்டே போனார். எனக்கு ஓரளவு விடயம் புரிந்தது, கழிப்பிடத்தை சுற்றி நீலம் , றோஸ் நிறங்களில் உறைகளும் வெள்ளை டிசு பேப்பர்களும் முட்புதர்களில் சிக்கிக்கிடந்தன. நான் லேசான சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தேன்.

அப்போது தான் நான் அவளைக்கண்டேன்

ஜனனி

என்பள்ளித் தோழி. கிட்ட தட்ட ஒன்றரை வருடமாகிவிட்டது அவளை கண்டு. அபோது நாங்கள் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம்.நான் சி வகுப்பு ஜனனி ஏ வகுப்பு . நன்றாக சதுரங்கம் ஆடுவாள், வருடா வருடம் கிளிநொச்சியில் நடக்கும் “ செப்டெம்பர் செஸ் “ போட்டிக்கு எங்கள் பாடசாலை அணியில் நாங்கள் இருவரும் செல்வதுண்டு.எனவே அவள் எனக்கு தோழியானாள். வகுப்பில் பாடம் இல்லா விட்டால் அவளுடன் போயிருந்து சதுரங்கம் ஆடுவேன்.ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன்.

பத்தாம் வகுப்பு இரண்டாவது தவணை ஆரம்பித்த போது கொஞ்சநாட்களாக ஜனனி பள்ளி கூடம் வருவதில்லை. அவள் தோழிகளிடம் விசாரித்துப்பார்த்தேன்.

“ஜனனி கலியாணம் செய்திட்டாள் ”

"ஏன் ?”

“பிடிப்பிரச்சனையாம்”

“யாரை ? ”

“கபிலனை”

“எந்த கபிலன் ?”

“அவளின்ர மச்சானாம் யாரோ ?”

”ஓ ஏல் கபிலனோ ?”

“ஓம் அவன் தான் .அந்த கறுவல் ”

அப்போது வன்னி சனங்களை உலுக்கி கொண்டிருந்த பிரச்சினைகள் இரண்டு ஒன்று கிபிரடி இன்னொன்று பிள்ளைபிடி.

விடுதலைபுலிகள் அப்போதுகட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு இருந்தனர், வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்கு வரவேண்டும் என்று கட்டாயமாக இயக்கத்தில் பிள்ளைகளை இணைத்தனர், இதனால் பல இளைஞர்களும் யுவதிகளும் காடுகளிலும் உறவினர்வீடுகளிலும் ஒழித்து வாழ்ந்தனர். எனினும் புலிகள் பிள்ளை பிடியை நிறுத்துவதாயில்லை. புலிகளின் அரசியல் துறை கடைசி காலம் முழுவதும் “பிள்ளைபிடிகாறர் ”என்ற பெயருடனேயே வழக்கொழிந்து போனது தனிக்கதை.
இவ் ஆட்சேர்பில் இருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர் அவர்களுக்கு அவசரமாக திருமணம் செய்து வைத்து அவர்களை புதுக் குடும்பமாக்கினர். பள்ளிகூடத்தில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் தாலியையும் குழந்தையையும் சுமக்க தொடங்கினர். இந்த அவலம் தான் ஜனனியை திருமணத்தில் தள்ளியது,

எனக்கு கபிலனை தெரியும் எங்களை விட இரண்டு வயது அதிகம். அப்போது அவ்ர் ஏல் எல் படித்துகொண்டிருந்தார். நன்றாக புட் போல் விளையாடுவார்.ஜனனியின் முறை மச்சான் என்று அடிக்கடி ஜனனி சொல்லியிருக்கிறாள்.
அதன் பிறகு நான் சேர்ச்சில் ஜனனியை கண்டேன். தலை வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் குங்குமம் வைத்திருந்தாள். முகம் சற்று பிரகாசமாய் மாறி இருந்தது, கொஞ்சம் குண்டாகியிருந்தாள்.

என்னை கண்டதும் எபோதும் பூக்கும் அதே வெள்ளை புன்னகையுடன் முகத்தால் சிரித்தாள்.அதன் பின்னர் இடம் பெயரும் போது என் தோழன் ஒருத்தன் கபிலன இயக்கத்துக்கு பிடிச்சாச்சாம் என்றான்.எனக்கு ஜனனியின் குங்கும வகிடும் சிரிப்பும் தான் ஞாபகம் வந்தது.
அதன் பிறகு நான் இன்று தான் ஜனனியை காண்கிறேன். வைத்தியசாலை நுழைவாயில் அருகே உள்ள மர நிழலில் நின்றிந்தாள். கறுப்பு நிறத்தில் சட்டை போட்டிந்தாள்
அவள் முன் போய் நின்றேன்

ஆச்சரியத்துடன்

“டேய்ய்ய்ய்”

எப்படி இருக்கிறாயடி ? கேட்டபடி அவளை ஏறிட்டேன்.

மிகவும் மெலிந்து போயிருந்தாள் . கண்களை சுற்றி கருவளையம் . முகத்தில் அங்காங்கே அம்மை கொப்பளங்கள் காய்ந்து கருகிக்கிடந்தன. காதில் தோடுகளில்லை. அதற்கு பதிலாக ஒரு வேப்பங்குச்சியை செருகியிருந்தாள். சிரிப்பு மட்டும் அப்படியே இருந்தது,

“எந்த முகாமடா ?”

”இராமநாதன் …நீ ? “

”கதிர்காமர் “

கண்களை நெற்றிக்கு ஓட்டினேன் வகிட்டில் குங்குமம் இல்லை.கழுத்தில் எதுவுமேயில்லை.
கபிலனை பற்றி கேடக கூடவே கூடாது, முடிவு செய்து கொண்டேன்.

“மாறிட்டோ உனக்கு ? ”

”ஓமடி கையில் ஒண்டு ரெண்டு காயேல்ல ”

”உனக்கு ?”

ம்ம் மாறிட்டு.

”இதில ஏன் நிக்கிற ?:”

””சும்மா தான் டா “

கதைத்தோம் பழைய கதையெல்லாம். யார்யார் உயிருடன் இருக்கிறார்கள் யார் இல்லை என்பது முதற்கொண்டு கதைத்தோம்.நான் கபிலன் பெயரை தவிர எல்லாவற்றையும் கதைத்தேன்.அவளும் எதுவும் சொல்லவில்லை.
நான் புறப்படும் வேளையில் தான் ஏதோ சொல்ல வாயெடுத்தவள்.சட்டென அடங்கினாள்.

“என்னடி ?”

“ஒண்டுமில்லைடா நீ போ ”

“இல்லை சொல்லு ?”

“இல்லை வேண்டாம் நீ போடா ”

தயங்கினாள் .வாய் போவையும் கண்கள் போகாதேயும் வைத்திருந்தன.

“இல்ல பரவாயில்லை சொல்லடி ”

“ஒரு கெல்ப்படா ..குறை நினைக்காதே”

நான் காற்சட்டை பையில் இருந்த பேசை ஒருமுறை தொட்டு பார்த்துக்கொண்டேன். அம்மா பூவரங்குளத்திற்கு அம்புலன்ஸ் ஏறும் முன் தந்த மூவாயிரத்தில் இரண்டாயிரம் இருந்தது.
“காசு ஏதும் ?”

“இல்லையடா காசெல்லாம் இருக்கு ”

“அப்ப என்ன ?”

“ஒருக்கா வெளிக்கடைக்கு போகோணும் ”

”ஹா ஹா இதுக்கு தான் மசுந்தின்னியே லூசு .என்ன வாங்கோணும் ? ”

“அதுடா ..குறை நினைக்காதை பிளீஸ் ”
“கேற்றில ஆமிக்காரர் ”

“அவங்கள் ஒண்டும் சொல்ல மாட்டாங்கள் .என்ன வாங்கோணும் எண்டு சொல்லிட்டு போய் வரலாம் ”

“இல்லையடா அதுதான் பிரச்சினை .கடைலையும் ஒரே பெடியள் ”

“என்ன வாங்கோணும் ? ” குழம்பியிருந்தேன்.

“ஒரு விஸ்பர் வாங்கோணும் டா ”

“…………..”

அவள் கேட்பது எனக்கு நன்றாக புரிந்தது .அப்போது நான் 16 வயது பையன் யெளவனத்தில் அந்தர சமாசாரங்களை அபோதுதான் தெரிந்து கொள்ள தொடங்கியிருந்தேன். கொஞ்சம் அதிகப்பிரசங்கி என்றாலும் என்னால் .அவள் கேட்டதை வாங்கிவரும் தீரச்செயலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

எனினும் ஒரு பெண்பிள்ளை கேட்கின்றாள்.அதுவும் தோழி.அவள் நிலமை புரிந்தது .அவளிற்கு அது உடனடியாக தேவைப்பட்டு இருக்க கூடும். வேறு வழியில்லை போய்த்தான் ஆக வேண்டும்.

“டேய் ஏலாட்டி சொல்லடா …யாரும் பெரியாக்கள கேட்டுப்பாக்கிறன் ”

அவள் குரலில் பரிதாபம் மிதமிஞ்சி வழிந்தது.
அவள் அதுவரை கையில் வைத்து பிசைந்து கொண்டிருந்த காசை பெற்றுக்கொண்டு .நடந்தேன் . வாசல் சென்ரியில் நின்ற இராணுவவீரன் முகம் இரண்டு மூன்று நாட்களாக நான் கடைக்கு போய் போய் பரிச்சமாகி விட்டது.அவனும் என்னை கண்டதும் புன்னகைத்து. விட்டு

“மல்லி கடைகு போறது ”

என்றான் சிரித்து விட்டு அவனைகடந்தேன்.நல்ல வேளை
“மல்லி என்ன வாங்க போறது ” என்றவன் கேட்கவில்லை.

கடையை நோக்கி நடந்தேன். கடையில் நான்கைந்து இளைஞர்கள் கைகளில் கொக் களுடன் நின்றிருந்தனர். நேராக கடைக்குள் நுழைந்தேன்.

கடைக்கார அம்மா இரண்டு நாள் சினேகத்தில் புன்னகைத்தார்
“என்னப்பன் வேணும் ? ”

“அன்ரி ஏதோ விஸ்பறாம் ?” தெரியாதது போல் இழுத்தேன்.

உடலெல்லாம் விறைத்து. வியர்வை கரை புரண்டு ஓடியது வழைமை போல் என் வலது கை நடுங்கத்தொடங்கியது.
கடைக்கார அம்மா அதனை என் கையில் தந்து விடுவாரோ என்று பயந்தேன். நல்ல வேளை அவர் அதை பேப்பர் ஒன்றில் சுற்றி பையில் போட்டு தந்தார்.

வாங்கி கொண்டு திரும்ப அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருதன்

“தம்பி அது பிஸ்கற் இல்லை ”

கண்டுகொள்ளாமல் வேகமானேன்.

இராணுவ வீரன் அதை பரிசோதிப்பான் என்று நினைத்தேன்.நல்ல வேளை அவன் புன்னகைத்த வாறே கேற்றை திறந்து விட்டான்.

நேராக நடந்து ஜனனி நின்றிருந்த மரத்தின் கீழ் வந்தேன்.
அவள் சங்கடாமாய் புன்னகைத்தாள்

“தாங்ஸ் டா தம்பி ” புதுக்குரல்
திரும்பி பார்த்தேன் கபிலன் நின்றிருந்தான்.
நான் ஜனனியை ப்பார்த்தேன்

சங்கடத்தின் அளவு கூட அவள் நெழிந்தாள்

“சொறிடா இவருக்கு வெக்கம் ”

.என்னிடம் விடை பெற்று இருவரும் புறப்பட்டனர்.
கபிலனின் கை ஜனனியின் கையினை பற்றியிருந்தது. இன்னொரு கையில் நான் வாங்கிவந்தது.

இருவரையும் பார்த்த படி நின்றிருந்தேன் ஜனனி கபிலனுக்கு தெரியாமல் திரும்பி ஒரு முறை கெஞ்சும் தொரணையி முகத்தை வைத்தபடி

“சொறிடா ” என்றாள் .
நான் பரவாயில்லை என்று தலையாட்டினேன். ஜனனியின் வார்த்தைகள் மீண்டும் காதிணுள் ஒலித்தன

“சொறிடா இவருக்கு வெக்கம் ”

அப்போதுதான் நான் முதன் முதலில் பிரபாகரன் மீது கோபப்பட்டேன்.

-யதார்த்தன்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

Posted by விகாரன் On 5:12 PM



மூன்று தர்ஷிகாக்களை மொழிபெயர்த்தல்
(முதல் தர்ஷிகா )
...............................................................................

பின்நவீனதுவத்தில் இருக்கிறோம் என்று சொல்லித்திரியும் எனக்கு.மூடநம்பிக்கைகள் பெரும்பாலும்  இல்லையென்றே நம்புகிறேன்.எனினும் பெயர் பற்றிய மூடநம்பிக்கை எனக்கு உண்டு பழைய நினைவுகளில் என்னை கடுமையாக பாதித்தவை பெயர்கள் தான் என்று நம்புகிறேன்.அதிலும் குறிப்பாக

தர்ஷிகா

தர்ஷனம் என்றால்  அலங்கரித்தல் என்றும் இதுவொரு சமஸ்கிரத சொல் என்றும் ஏ .எல் படிகும் போது தமிழ் சேரிடம் இன்போமேசன் பேற்றுக்கொண்டேன். மொத்தமாக 4 தர்ஷிகா அல்லது தர்ஷினி என்ற பெயர் பற்றிய நினைவுகளை ஹாரி பொட்டர் நாவலில் சேமித்து வைப்பது போல என் நினைவுகளில் சேமித்து வைத்திருக்கிறேன் .முதலாவது தர்ஷினி என்னுடைய ஆங்கில டீச்சர்.
எனக்கு தெரிஞ்சு என்சார்ந்தவர்களிடம் தர்ஷினி மிஸ் பற்றி புழுகிப்புழுகி சொல்லி இருக்கிறேன்  மீண்டும் தர்ஷினி மிஸ் என்று ஆரம்பித்தால்  கண்டிப்பாய் என்னை அவர்கள் கொன்று விடக்கூடும் எனினும் என் புதுதோழர்களுக்காக இந்த இணைப்பு , மிஸ் பற்றி நான் எழுதிய பத்தி ஒன்று.

http://maatram.org/?p=1863

முதல் தர்ஷிகா

ஹாரிபோட்டர் என்று முதல் பந்தியில் குறிப்பிட்டது எதெட்சையானதல்ல திட்டமிட்டது தான். முதல் தர்ஷிகாவை உள்ளே வரச்செய்த பெருமை  சாட்சாத் ஹாரி பொட்டரையே சாரும்.
அபோது நான்  கிளிநொச்சியில் பத்தாம்  வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.மந்திர தந்திர கதைகள் ,அலிபாபாவும் 40 திருடர்களும் ,டெக்ஸ்வில்லர் ,மாயாவி என்பவற்றோடு எனக்கு ஹாரி பொட்டர் மேல் நான் வெறியனாக இருந்த  காலம் அது.ஹாரிபொட்டர் படம் போட்ட பென்சில் தொடக்கம் டீசேட்வரை சேகரித்து வைத்திருப்பேன்.

அப்பதான் நான் கிளிநொச்சி பள்ளிகூடத்தில் சேர்ந்திருந்தேன். முதல் முதல் அண்டைக்கு முயற்சியாண்மை பாடத்திற்கு செல்கின்றேன். நான் சி வகுப்பு எங்கட வகுப்பில் நான் மட்டும் தான் அந்த பாடம்  எடுத்தேன். எனைய பிரிவுகளிலும் குறைவான பிள்ளையள்  தான் முயற்சியாண்மை பாடம் எடுப்பதுண்டு.எனவே எல்லா வகுப்பில் இருந்தும் முயற்சியாண்மை எடுக்கும் மாணவர்கள் ஒரே வகுப்பில் ஒன்று கூடுவோம்.என் முதல் நாள் விஜயத்திலும் அதுதான் நடந்தது.

எல்லா பிள்ளையளும் புதுசா ஒரு பள்ளிகூடம் போறதெண்டா ஒரு மாதிரி அன்னியமா உணர்ந்தபடி முழித்து கொண்டிருப்பார்கள் .நான் கொஞ்சம் விதிவிலக்கு இது வரைக்கும் மொத்தமாக 13 பள்ளிகூடத்தில் படிக்கும் பாக்கியத்தை என் நாட்டின் அரசியல் சூழ்நிலை எனக்கு பெற்றுதந்திருக்கிறது.எனவே நான் கேசுவலாக வகுப்பை நோட்டமிட்டேன்.
அபோது ஒரு வெள்ளை கையில் இருந்த நோட்புக்கில் ஹாரிபொட்டரும் ஹார்மோயின் கிரேஞ்சரும் மந்திர குச்சியுடன் நின்று  கொண்டிருந்தனர் . நிமிர்ந்து பார்த்தேன்  முதல் தர்ஷிகா. எனக்கு அழகாக  தெரிந்தாள்.

அதற்கு பிறகு அவளுடன் எபோதும் ஏதாவது வம்பிளுத்த படி இருந்தேன்

பிச்சுமணி என்று பட்டம்  வைத்தேன்

வகுப்பில  இருக்கிறதிலையே சுமாரான பையன் பெயரை  அவளுக்கு
(பல்லைகடித்து கொண்டு) பட்டம் தெளித்தேன்

அந்த பொண்னு நல்லா  படிக்கும் எனவே படித்தேன்(குறிப்பாக  சயன்சு)

இப்படியாக  ஒவ்வாத ஏற்றங்களே ஒன்றையொன்று கவருமென்ற தியரியை அப்ளே செய்து கொண்ருந்தேன்.

கிளிநொச்சியில்   முதல் ஷெல் விழுந்தது

இடம்பெயர்ந்து தர்மபுரம் (முல்லைதீவு மாவட்டம்) போனோம் அங்கே இயங்கிய எங்கள் பள்ளிகூடத்திலேயெ மீண்டும் சேர்ந்தோம் .நான் பழைய தியரியை தொடர்ந்தும் அப்ளே செய்தேன்.
தர்மபுரத்திலும் ஷெல் வீழ்ந்தது.

எல்லாம் நொறுங்கிப்போனது,

நான் மறுபடியும் முதல் தர்ஷியை  பற்றி கேள்விப்படும் போது மற்ற இரண்டு தர்ஷிகளையும் சந்தித்து இருந்தேன்.

(இந்த கதையை முடித்து விட்டு அவ் உபகதைகளை சொல்கிறேன்)

மூன்று முகாம்கள் மாற்றப்பட்டு செட்டிகுளம் இராமநாதன் முகாமில் எங்களை கொண்டுவந்து விட்டார்கள்.முள்ளிவாய்க்கால்  முடிந்து எச்சம் எல்லாம்  முகாம் வந்து சேர்ந்திருந்தார்கள்.நாங்கள் பேரவலத்தின் ஆரம்ப பகுதியில் வெளியேறிவிட்டதால் முகாமில் எங்களுக்கு சீனியாரிட்டி. அந்த முகாமில் மட்டும் 70000 சனம் இருந்தது, பக்கத்தில் ஆனந்தகுமாரசாமி முகாம்.ஒவ்வொரு நாளும் தண்ணீருக்கும் சாப்பாட்டிற்ற்கும் சண்டையிடும் நேரம் போக மீதி நேரங்களில் நான் உறவுகளையும் நண்பர்களையும் தேடி என்னுடைய முகாமிற்கும் பக்கத்தில் உள்ள ஆனந்த குமாரசுவாமி முகாமிற்கும் நதீசன் எனும் நண்பனுடன் போய் வருவேன்.

என் சகோதரி மன்னார் முகாமில் இருந்தாள் எனவே நாங்கள் அவளிடம் போவதற்கு விண்ணப்பித்து விட்டு காத்திருந்தோம்.அக்கா இருந்த முகாம் கொஞ்சம் வசதி கூடினது, வெளியில் சென்று வரலாம் , பள்ளிகூடம் பொகலாம் என்று அக்கா கடிதம் போட்டிருந்தாள் அதைவிட இரண்டு வருடமாக அவளைப்பார்க்கவில்லை எனவே அங்கே போவது எங்களுக்கு அவசியமாக இருந்தது,எனவே காத்திருந்தோம்

அன்று வழமைபோல் எங்கள் முகாமில் நடந்து வந்து கொண்டிருந்தேன் ,தகிக்கும் வெயிலில் காலில் செருப்பில்லை,தலைமுழுவதும் முகாமின் செங்கிரவல் மண்ணின் தூசி படிந்து என் தலையை இளம் சிவப்பு ஆக்கியிருந்தது.மெலிந்த தேகம் ,மிகக்கறுத்த உருவம் நான்.(என் புரபில் பிக்சர் அந்த கோலத்திற்கு ஆயிரம் வருடம் பிற்பட்டதாகும்)

தீடிரென பின்னால் இருந்து ஒரு உருவம் கட்டியணைத்தது

”டேய் ஹாரி பொட்டர் ”
(உண்மையில் அபோது தான் எனக்கு அந்த பெயர் பொருந்தியது ,ஒரு சின்ன மாற்றம் வடமொழி “ஹ”வை எடுத்துவிட்டு தமிழ் “க” போடவேண்டும்).திரும்பிப்பார்த்தேன்

“டேய் சாரு”

சாரு என் பள்ளி தோழர்களில் ஒருவன் ,எனக்கு ஹரி பொட்டர் டிவிடி கொண்டுவந்து தரும் ஜீவன்.

கையில் கட்டு போட்டிருந்தான் அவனுக்கு கைவிரல் ஒன்று இல்லை.
“என்ன நடந்ததடா ?”

”வரேக்க பீஸ் ஒண்டு அடிச்சிட்டு டா”

ஒருவிரல் போனதை அவன் சாதாரணமாகச்சொன்னான்.அங்கே அப்போது அப்படித்தான்.

”டேய் பிரவீன் ஷெல்விழுந்து செத்தது தெரியுமா ?”

“ம்ம் தெரியும் டா”

“சுஜீபா ?”

“ஓமடா உடையார் கட்டில்  இருக்கேக்க கேள்விபட்டனான்.”

“நாங்கள் செத்த வீட்ட போனம்”

“நான் வரேல்லாம போச்சடா”

“டேய் தர்சிகா அழுத அழுகையடா ”

(சுஜீபா தர்ஷியின் ஆருயிர் தோழி .)

“டேய் ஒண்டும் சொல்லாதையடா பிளீஸ்”

“சரி விடு பிச்சுமணியை கண்டனியே ?”

“இல்லை… எங்கையடா ?” பரபரத்தேன்

“நேற்று கண்டனான். ஆனந்த குமார சாமி முகாம்”

எந்த பிளாக் ?

அதெல்லாம் கேக்கேலையடா

தண்ணி எடுக்கிற இடத்தில் கண்டன்

அவன் விடைபெற்றான்.

நான் நடந்தேன் இல்லை ஏறக்குறைய பறந்தேன். செருப்பற்ற என் கால்களில் பீட்டர்பானின் பறக்கும் சப்பாத்துகள் மாட்டியிருப்பது போல.
அன்றிலிருந்து ஆனந்த குமாரசுவாமி முகாம் முழுவதும் சுத்தினேன். தண்ணீர் எடுக்கும் இடங்களில் எல்லாம் நேரசூசியுடன் காத்திருந்து கவனித்தேன். ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்கு செல்வதற்கு கம்பிவேலி ஒன்றை தாண்ட வேண்டும் ஒரிரு முறை கால்களில் கீறி கிழித்தன கம்பிகள்.
(இதை டைப்பும் போது அவ்வடுக்களை தொட்டு பார்க்கிறேன்.)

ஒருமுறை இராணுவவீரன் ஒருவனிடம் சிக்கி கொண்டு அடிவாங்கவும் பார்த்தேன் எனினும் .செல்வதை நிறுத்தவில்லை

15 நாட்கள் கருந்துளைக்குள் நுழைந்தது போல் கரைந்து போயின எனினும் அவளை கண்டு பிடிக்கவேயில்லை நான்.எனினும் விக்கிரமன் மனம் முருங்கை மரமேறுவதை நிறுத்துவதயில்லை.
அன்று மதியம் ஆனந்தகுமாரசாமிக்கு போய் விட்டு மதிய சாப்பாட்டுற்கு என் கூடாரம் திரும்பினேன்.அம்மா முகத்தில் சூரியனை பூட்டிக்கொண்டு நிண்டா .

“தம்பி நாளைக்கு அக்காட்ட போகலாமாம்”

எனக்கு தூக்கி வாரிபோட்டது.

அம்மாவும் அப்பாவும் தம்பியும் வெளிநாட்டுநிறுவனங்கள் அள்ளிகொட்டிய நிவாரண சாமான் எல்லாவற்றையும் கட்ட தொடங்கினர், எனக்கு என்ன செயவதென்றே புரியவில்லை. கடைசியாய் ஒரு முறை தேடிவருவோம் என்று புறப்பட்டேன்.
வழமைபோல் இல்லாமல் ஓடி ஓடித்தேடினேன்.

ஆனந்த குமாரசுவாமியின் கிரவல் ரோடுகளில் குட்டியை தொலைத்த மிருகம் ஒன்று போல பைத்தியமாய் அலைந்தே

மேற்கே சூரியன் வீழ்ந்தது.

தோற்றுவிட்டேன்

காலையில் அம்மா  உறவுஇணைத்தல் பஸ்ஸில் எல்லா பொருடளையும் ஏற்றி விட்டு எனக்கும் யன்னல் கரையில் சீட் ஒதுக்கி தந்தா.
இரவு முழுக்க அழுது என் கண் வீங்கியதை கூட அம்மா கவனிக்க வில்லை குடும்பமே  அக்காவை பார்க்கும் சந்தோசத்தில் இருந்தது. வெளியே பார்தேன்.
எங்கள் முகாமின் நுழைவாயில் ஆனந்தகுமார சுவாமி முகாமின் வேலியோடு இருந்தது,அவ்வேலிக்கு பக்கத்தில் தற்காலிக பள்ளிகூடம் ஒன்று ம் சில  கொட்டில்களும் இருந்தன .எங்கள் பேரூந்தின் இன்ஜின் உயிர்த்தது.
 நான் முகாமையே வெறித்தபடி இருந்தேன்.விழிமடல்களை கிளித்தவாறு சுடுகண்ணீர் தரையில் கொட்டியது.

அபோது என் கண்வேறித்திருந்த கொட்டில் ஒன்றில் இருந்து தர்ஷிகா வெளிப்பட்டாள் கையில் கோப்பை ஒன்று .அவள் காலை உணவை முடித்து கொண்டு கைகளுவுவது தெரிந்தது.

பேரூந்து நகர என் பக்கத்தில் இருந்த யரோவின் குரல் ஒலித்தது
தம்பி முதல் எந்த முகாமுக்கு இந்த பஸ் போகும் ?

தெரியாது .

-யதார்த்தன்

(உபகதைகள் தொடரும்)

சனி, 18 ஏப்ரல், 2015

Posted by விகாரன் On 7:17 AM


வவுனியா ,நெழுக்குளம் 

வன்னியை விட்டு வெளியேறியவுடன் நாங்கள் தங்கவைக்கப்பட்ட முதலாவது நலன்புரி முகாம்.
நெழுகுளம் முகாமிற்கு வந்து 4 மாசத்திற்கு மேலாகி விட்டது.இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு ஓ.எல் பரீட்சை.முகாமிற்கு வெளியில் எங்கட வயது இருக்கும் பிள்ளைகள் பள்ளிகூடம் ஸ்பெசல் கிளாஸ் டியூசன் என கற்று கொண்டிருந்தார்கள்.நாங்கள் தண்ணீர் எடுபதற்கும் சாப்படிற்கும் லைனில் நிற்பது போக மீதி நேரங்களில் கரம் போட் விளையாடுவது.இரவில் பெரிய திரையில் போடப்படும் ஏதோ ஒரு தமிழ் சினிமாவை பார்த்த படி நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தோம் .அப்போது முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் சும்மா சம்பளம் எடுக்கிறம் என்று மனம் உறுத்த ராணுவத்திடம் அனுமதி வாங்கி முகாமில் இருக்கும் ஓ எல் மாணவர்களுக்கு பாடம் எடுத்தனர்.

ஒரு பெரிய வேப்ப மரத்தின் கீழ் தறப்பாள்களை விரித்து கிட்ட தட்ட 40 மாணவர்களுக்கு மேல் படிக்கத்தொடங்கினோம். எனக்கு புது நண்பர்கள் அறிமுகமானார்கள் .அருண் லூக்கு டிலக்சன் ,ஜூலியட் ,பவதாரணி இப்படியாக. தர்ஷிகாவும் அறிமுகமானாள். அவள் எனக்கு கணிதம் சொல்லிதருவாள் அவள் எனக்கு நல்ல தோழியானாள்.அவள் மேல் எனக்கு பிரியம் வர அவளின் பேயரிலிந்து ஏராளமான இத்யாதி காரணாங்கள் இருந்தன.

அன்று அவளிற்கொரு பரிசை எடுத்து வந்திருந்தேன்.
அன்று காலையில் நான் அதனை அவளிற்கு பரிசளித்தபோது அதனை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள் . லேசாய் மஞ்சள் படிந்து கிடந்த அந்த யானை தந்த லொக்கட்டை சீவிச்சீவி நான் மிக வெண்மையாக அடித்திருந்தேன். சமர வீர என்ற அந்த வயதான பொலிஸ்காரரிடம் நான் அந்த இரண்டு விரலிடை கூட இல்லாத யானைத்தந்தத்தை வாங்குவதற்கு எத்துனை பிரயத்தனங்களை மேற்கொண்டேன் .அது எனக்கு கொஞ்சம் மரியாதைகுறைவான ஒரு செயலாகவே பட்டது .எனிமும் அந்த மனப்பாங்குஅவள் அவதனை கண்டவுடன் அவள் கண்கள் உற்பத்தி செய மகிழ்ச்சிக்குள் மூழ்கி காணாமல் போயிருந்தது.

THARSHIKA என்று பொறிக்கபட்ட அந்த யானை தந்தத்தினை லேசாய் அவள் விரல் ரேகைகள் தடவிக்கொடுத்தன.

“எங்காலை உனக்கு தந்தம் ? ”

“யானை ஒண்டு வேட்டையாடின்னான் ”

“எங்க இந்த முகாமுக்கையோ ?”

“ஓம்”

“நம்பிட்டன் ”

“தங்ஸ்”

“சொல்லடா ..எங்காலை ?”

“சமர வீர ட்ர வாங்கின்னான் ”

“அந்த மனுசன என்ன சொல்லி மயக்கின்னி ? அதுவும் உன்ர அரை குறை இங்கிலீசால ?”

“ஹிம்”

”தந்தம் வச்சிருந்தா குற்றமெல்லோ ? ”

“ ஒமடி இந்த ஒண்டரை இஞ்சி தந்தத்துக்கு என்னை தூக்கில போட போறாங்கள் ”

“வெவ்வ்வேவ்வே ”

கழுத்தில் எபோதும் இருக்கும் முருகன் டாலர் தொங்கிய கருப்பு நூலில் என் தந்த லொக்கட்டை கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டாள்.
சரி வா கிளாசுக்கு போவம் என்றேன். டெண்டுக்கு போய் கொப்பி எடுக்கோணும் . நடந்தாள்.தொடர்ந்தேன்.
தர்ஷியின் கூடாரம் முகாமின் பின் பக்கம் இருந்த நீர் எடுக்கும் குழாய் கிணற்றின் பக்கம் இருந்தது.என்னுடைய கூடாரம் முகாமின் முன் பக்கம் உள்ள குழாய் கிணற்றடியில் இருந்தது.
அவளுடைய கூடாம் வர உள்ளே நுழைந்தாள் கூடாரத்தின் வெளியே உள்ள மர நிழலில் அவள் அம்மா தர்ஷியின் சகோதரியொருந்த்தியின் தலையில் வகிடு பிடித்து தலை வாரிக்கொண்டிருந்தாள். என்னைக்கண்டதும்

”தம்பி காட் வாங்கி வச்சிருக்கிறன் ”
என்றாள் இரகசியமான குரலில்

“சரி அன்ரி ”

“:எத்தினை மணிக்கு கதைக்கலாம் ?”

“படம் போட்ட பிறகு வாங்கோ அன்ரி ”

“சரி தர்சின்ர அண்ணா காசு போட்டவனோ எண்டு கேக்கோணும் ”
“ஓம் அன்ரி தர்ஷி சொன்னது ”

“கவனமா இருக்கோணும் நேற்று கிச்சின் பல சார்ச் போட்ட எண்டு யாற்றையோ போன் பிடிபட்டு போச்சு ”

“ஓம் அன்ரி தெரியும் ”

நாங்கள் முகாமில் மொபைல் போன் வைத்திருக்க தடை.எனினும் ஒரு சிலர் இரகசியமாக வைத்திருந்தனர்.நானும் ஒரு NOKIA 1100 வைத்திருந்தேன்.முகாமில் ஒவ்வொரு நாளும் இரவில் மல்டி மீடியா புரோஜெக்டர் வைத்து எதோ ஒரு தமிழ் படம் போட்டனர். இரவில் பெரும்பாலான ரெண்ட்களில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அந்த இடைவெளிக்குள் நாங்கள் டெண்ட்களில் போன் கதைத்து கொள்வோம், பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பவர்களுடன் பொருளாதார தேவையின் பொருட்டு பேச வேண்டியிருந்தது.

உள்ளே போன தர்ஷி வெளியே வந்தாள்.
வகுப்பு நடக்கும் வேப்ப மரத்தடி நோக்கி நடந்தோம்,

”அம்மா என்னவாம் ?”

“போன் கதைக்கோணுமாம் ”

”ஓமடா இரவுக்கு ஒருக்கா கதைக்கோணும் அண்ணாவோட“

“சரி டி”

தர்ஷியின்கூடாரத்திற்கு அடுத்ததாக இருந்த கூடாரத்தை கடக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான வாடை என் நாசியை தாக்கியது

“என்னடி மணக்குது ? ”

“என்ன மணம் ? ”

“உனக்கு மணக்கேலையே ஏதோ அழுகின மணம் ”
“முகாம் எண்டா அப்பிடிதான் பேசாம வாடா ”
அதட்டினாள்.

வகுப்பு முடிந்ததும் தர்ஷிகா தன் தோழிகளை அழைத்துக்கொண்டு எங்கோ போய்விட்டாள் அருண், லூக் டிலக்சன் , இருவரும் என்னிடம் வந்து

“டேய் இரவுக்கு ஒரு மிசன் இருக்கு ”

(பாணிற்கு வெங்காயம் முட்டை எல்லாம் சமயலறையில் இருந்து சுட்டு வருதல், போனிற்கு துப்பரவுக்கு வரும் தொழிலார்களை பிடித்து காட் வாங்குதல் , காய்ச்சல் தலையிடி எண்டு பொய் சொல்லி கொஸ்பிட்டலுக்கு பதிஞ்சு அம்புலன்ஸில் இராணுவ பாதுகாப்புடன் போய் வவுனியா ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருக்கிற சீடி கடையில் இங்கிலிஸ் பட டீவிடி வாங்கி வந்து சமரவீர வின் லப்டொப்பில் படம் பார்த்தல் முதலான சாகசங்களை நாங்கள் மிஷன் என்று அழைத்தோம் ஒவ்வொரு மிஷனுக்கும் ஒவ்வொரு பெயர் வேறு வைக்கப்படும்)

”என்ன மிசன் மச்சான் ? ’

“ஆப்பரேசன் அல்க கோல் ”
என்றான் லூக் ரொசாந்.

“அல்ககோலா ?”

“சாராயம் டா ”

“என்ன ? வாங்கி குடிக்க போறமா ? ”

“இல்லயடா பிடிக்க போறம்” அருண்.

“தெளிவா சொல்லடா”

“முகாமுக்க ஒரு இடத்த சாராயம் காய்ச்சி வில்படுது ”

“போடா முகாமுக்க என்னெண்டு காய்ச்சுறது ?”

“காய்ச்சுறாங்களாடா ..”

“உனகென்னண்டு தெரியும் ?”

”லூக்க்கின்ர அப்பா நேற்று குடிச்சிட்டு வந்தவராம்”

“டேய் ஆமி ஆரிட்டயும் வாங்கி குடிச்சிருப்பார் ”

“இல்லையடா இண்டைக்கு இரவு அவரை பின் தொடர்றம் கண்டு பிடிக்கிறம்.”

“சரி.”

இரவு படம் போடும் வேளையில் தர்ஷியும் அவள் தாயும் எங்கள் கூடாரத்திற்கு வந்தனர். அவர்களுக்கு நம்பரை டயல் செய்து கொடுத்துவிட்டு .ஆப்ரேசன் அல்க கோலிற்கு புறப்பட்டேன்.

தர்ஷி
“எங்க போற ?”
“அருணாக்களிட்ட ”

“படம் பாக்கவோ?”

“இல்லை வந்து சொல்லுறன் ’

“ம்ம்”

கதைச்சிட்டு போனை அம்மாட்ட குடுத்திட்டு போ.என்றேன் அவள் தலையாட்டினாள்.

நாங்கள் திட்டமிட்ட படி லூக்கின் அப்பாவை பின் தொடர்ந்தோம் .

அவர் நேராக முகாமின் பின்பக்கம் இருந்த தண்ணீர் குழாய் இருந்த பக்கமாய் போனார்.தரிஷியின் கூடாரத்தை கடந்து அடுத்ததாக இருந்த கூடாரத்தினுள் நுழைந்தார். வெளியில் வரும்போது ஒரு சோடா போத்தல் நிறைய இளம் மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்றுடன் வெளிப்பட்டார் நேராக அந்த விளக்கு வெளிச்ச மற்ற ஒரு இடத்திற்கு சென்று அதனை குடித்து தீர்த்தார், எங்களுக்கு பரம திருப்த்தி நாங்கள் தேடிவந்தது தெரிந்து விட்டது.லூக் தந்தையை கொஞ்சம் பரிச்சமான கெட்ட வார்த்தையால் திட்டினான். மூவரும் காலையில் பொலிசிடம் சொல்லி விடுவதென்ற முடிவுடன் கலைந்து சென்றோம்.
ஒப்ரேசன் அல்ககோல் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

அடுத்தநாள் காலையில் முகாமே கதி கலங்கியது .அந்த கூடாரத்தை சுற்றிவளைத்த பொலிசார் இரண்டு இளைஞர்களை பிடித்து அடித்து அவர்களின் தலையில் சாராய கான்களை வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று பொலீஸ் வானில் ஏற்றி கொண்டு சென்றனர்.நாங்கள் மூவரும் ப்ரும் சமூக களையெடுப்பை நிகழ்த்தி விட்ட வெற்றிகளிப்பில் படிக்கும் இடத்திற்கு வந்தோம்.அங்கே தரிஷிகா அவள் தோழிகளுடன் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

“எப்படி எங்கட மிசன் ?” என்றேன் அவளிடம்
என்ன என்று கேட்டாள்

சொன்னென்.

சட்டென்று அவள் கை எழுந்து என்கன்னத்தில் அறைந்தது.

நிலை குலைந்து விட்டேன். ஒரு கணம் குலைந்து நிமிர்ந்தேன் கோபம் பீறிட்டு வர
ஏன் இப்ப அடிச்சனி என்று அவளை பிடித்து உலுக்கி பிடித்து தள்ளி விட்டேன். அவள் பக்கத்தில் இருந்த வேப்பமரத்தில் கை உரச விழுந்தாள்.அழுதாள்.

“டேய் இப்ப ஏன் அவளை தள்ளி விட்டனி ?” பவதாரணி மல்லுக்கு வந்தாள்.

”சும்மா ஏன் இப்ப அடிச்சவள் ?”

“நீ செய்த வேலைக்கு பின்ன என்ன செய்யிறது ? ”விம்மிய படி சொன்னாள்.

அவள் கைகைல் சிராய்ப்பு சிவப்பாய் கசிவது தெரிந்தது.

“நான் என்ன செய்தனான் ? சாரயம் காய்சினவங்களை பிடிச்சு குடுத்தது பிழையோ ?”

“அந்த பெடியளின்ர அக்கா மண்ணெண்ணை குடிச்சிடா தெரியுமோ ?” பவதாரணி சீறினாள்.

அதுக்கு நான் என்ன செய்யிறது அது காய்ச்ச முதல் யோசிச்சு இருக்கோணும்.

”டேய் அவையள பற்றி உனக்கு என்னடா தெரியும் ?” தர்ஷி.
”என்ன? ஏன் இப்ப துள்ளுற ?

”உனக்கென்ன காசு இருக்கு. அப்பா இருக்கு .எங்களுக்கு அண்ணா அனுப்புறான் ” ஆனா அதுகளுக்கு ஒருத்தரும் இல்லை .என்னெண்டு அதுகள் சீவிக்கும் ? “

அங்க சாராயம் காய்ச்சி விக்கிறது எனக்கு எப்பவோ தெரியும் அந்த அக்கா அடிக்கடி அழுவா என்னட்ட தங்கட தலை விதிய சொல்லி . அவாச அண்ணை மார் பாவம் எண்டு.உனக்கு அதெல்லாம் தெரியாது. பாவம் அந்த அக்கா. அவமானத்தில மண்ணெண்ணை எடுத்து குடிச்சிட்டா.
நான் எதுவும் பேசவில்லை .

இன்னும் கொஞ்சம் என்னை திட்டினாள் .எனக்கு எதுவும் கேட்கவில்லை.

“இனி என்னோட கதைக்காத ”

என்றவள் வேகமாய் நடந்து போய் விட்டாள்.

“சரிதான் போடி ”

எனக்கு கோபம் ஆறவில்லை எனக்கு அந்த அக்கா மண்ணெண்ணை குடித்ததை பற்றியோ இல்லை சாராயம் காய்ச்சியவர்கள் பற்றியோ அவர்களை பற்றியோ யோசிக்கவே தோன்றவில்லை. எனக்கு அவ்வளவு பேரின் முன்னால் ஒரு பெண் பிள்ளையிடம் வாங்கிய அறை தான் பெரிதாக தெரிந்தது. என் தன்முனைப்பு அன்று இரவு முழுவதும் பூரணமான வெறுப்பிற்கும் கோபத்திற்கும் என்னை கொண்டு சென்றது.
காலையில் சூரிய வருகைக்கு முதலே எழுந்து எங்கள் கூடாரத்திற்கு சற்றுத்தள்ளி இருக்கும் குழாய் கிணற்றிற்கு அருகில் உள்ள சிறி மூங்கில் புதரின் கீழ் காட் போட் மட்டைகளின் மேல் அம்ர்ந்து மூங்கிலுக்கு முதுகை கொடுத்து சாய்ந்திருந்தேன்.

“கன்னத்தி விழுந்தது இன்னும் உள்ளே வலித்து கொண்டிருந்தது ”

அபோது தர்ஷிகாவும் அவள் சகோதரிகள் இருவரும் தண்ணீர் குடங்களுடன் வருவது தெரிந்தது,நான் பார்த்தபடியிருந்தேன். அவர்களின் தண்ணீர் குழாய் ஏதோ சேதபட்டு இருக்க வேண்டும்.அதுதான் இங்கே வருகிறார்கள்.

என்றுமில்லாத வாறு நான் அவளை நன்றாக பார்த்தேன். வானம் லேசாக மஞ்சளடிக்க தொடங்கியிருந்தது.அந்த மெல்லிய மஞ்சள் ஒளியில் அவள் தெளிவாக தெரிந்தாள். கால்வரை நீண்டு தரையை தொட்டும் தொடாமலும் அலையும் கறுப்பு பாவாடை யும் கறுப்பு மேற்சட்டையும் அணிந்திருந்தாள். அவள் வெள்ளைத்தேகம் மஞ்சளொளியில் லேசாய் பசாடையடித்தது. முகத்தில் எந்த உணர்வுமில்லை.இன்னும் அவள் முகம் கழுவியிருக்கவில்லை. கண்கள் அழுது வீங்கி இருந்தன. நான் மூங்கில் மீது சார்ந்திருப்பதை கண்டிருப்பாள். முகம் இறுகி இறுகி கொண்டே சென்றது. நடந்து வந்து குடத்தை வைத்தாள் அவள் தங்கை தண்ணீர் பம்பியை அடித்து தண்ணீரை நிரப்பினாள். மூன்று பேரின் குடமும் நிறைந்து முடிய ,அவள் சகோதரிகள் நடக்க தொடங்கினர். என்னை பார்த்தபடி குடத்தை தூக்க போனாள் குடம் கைகள் நழுவி அவள் உடலெங்கும் நீர் தெறிக்க விழுந்து உருண்டது அவள் உடை நனைந்து விட்டது.

“போங்கோ நான் அடிச்சு கொண்டு வாறன் ” சகோதரிகளிடம் சீறினாள்.

நான் பார்த்த படியிருந்தேன்.

மறுபடியும் தண்ணீரை நிரப்பினாள் . குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தாள் சட்டென்று என்னை நோக்கி வந்தாள். மிக வேகமாக வந்தாள் கழுத்தில் இருந்து கறுப்பு கயிற்றை பிடுங்கி என் முன் போட்டாள்.

எனக்கு சினம் தலைக்கேறியது சட்டென்று அந்த தந்தத்தை எடுத்து பல்லில் வைத்து கடித்தெறிந்தேன்.

அவளிற்கு அழுகை மார்பபிலிருந்து எழுந்துவந்து தொண்டையில் வந்து நின்று விம்மியது . திரும்பி வேகமாய் நடக்க தொடங்கினாள்.

நீரில் நனைந்த அவள் பாவாடையில் கால்கள் பட்டு ஓசை ஒன்று சீரான சந்தத்தில் கிளம்பி வந்தது. அது ஒரு பெரிய பறவை தன் பிரமாண்டமான சிறகுகளை உதைப்பது போன்றிருந்தது. அவள் நடக்க நடக்க அந்த ஈரப்பாவாடை யின் ஒலி பறவையொன்றின் சிறகுகள் தான் என்றே நினைக்க தோன்றியது

மிக லாவகமாக சீரான சந்தத்துடன் அந்த பறவைதன் சிறகு விரித்தலை நிகழ்த்தியது .

பிறகு

பறவையின் உருவம் மறைந்த பின்னரும் சிறகுச்சத்தம் நிற்கவேயில்லை.

#யதார்த்தன்.