சனி, 30 மே, 2015

Posted by விகாரன் On 6:45 AM


இப்பத்தியின் தலைப்பை பார்த்தவுடன் சமீபத்திய உரையாடல்களின் பிரகாரம் நான் வித்தியா  பற்றி  பேசப்போவதாக  நினைக்கலாம்.நான்  வித்தியா பற்றி பேசப்போவதில்லை . வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட வன்முறை புறவயமானது .அதாவது அது நேரடியான ஒன்று. சட்டத்திற்கும் சமூகத்திற்கும் அது குற்றம் என்றும் அநீதி  நேரடியாக தெரியும். ஆகவே  நான் எந்த காலத்தில் ஒரு பத்தியை எழுத தொடங்கினாலும் உலகின் எதோ இரு மூலையிலோ மூலைகளிலோ இருந்து நிறைய வித்தியாக்களை அடையாளப்படுத்தி கொள்ள முடியும். ஆதலால் நான்  வித்தியாவின் அநீதிக்கான ஆணி வேர்களை தேடிப்போக போகிறேன் அல்லது அந்த அநீதியின் உண்மை தங்கு தளங்களை பற்றி கூற போகிறேன் .நான் சொல்பவற்றில் பெரும்பாலானவை புறவயமாக சட்டத்துக்கோ நம் சமூகத்திற்கு குற்றமாக தெரியாதவை.ஆனால் வித்தியாவின் மீது நிகழத்தப்பட்ட அநீதிக்கு சற்றும் சளைக்காதவை.


நேற்று யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தின் பேரூந்தொன்றின் யன்னல் கம்பியில் தலையச்சாய்த்தபடி கண்களை மூடியிருந்தேன். தீடிரென ஒரு கரம் என் தோள்களில் மென்மையாய் தட்டியது .நிமிர்ந்தேன். ஒரு  இளம் தாய் கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள் வலது கரம் என்னை நோக்கி யாசித்து நின்றது. அவள் எதுவும் பேசவில்லை கண்களில் துளி கூட சலனமில்லை . நெற்றி வகிடு நேரற்று பிரித்து சென்றது . வகிடு தொடங்கும் நெற்றியில் லேசாய் குங்குமம். அவள் கண்ணையும் முகத்தையும் போலவே அவள் குழந்தையும் சலனமற்று உறக்கத்திலிருந்தது .அவளிற்கு  என் வயதோ அல்லது என்னை விட ஓரிரு வயது அதிகமாகவோ  இருக்கும். அவள் முகத்தில் இன்னும் பதின்ம வயதுக்களை  பூரணமாய் உதிராமல் கிடந்தது.

அவள் ஏதும் கேட்கவில்லை கை மட்டும் நீண்டு நின்றது.அவளை ஏறிட்ட படியே  கையில் ஒரு பத்து ரூபா தாளை வைத்தேன் .நகர்ந்து அடுத்த சீற்றிற்கு போய் விட்டாள்.
அவள் போன பின் நான் அவளை பற்றியே யோசித்தேன்.
ஒளவை சொன்ன இளமையில் வறுமையும்  சொல்லாத,  வறுமையில் குழந்தையும் அவளிடம்  வந்து சேர்ந்து விட்டன.

அவள்  கணவன் எங்கே ?

ஒரு வேளை அவன் அடுத்த பஸ்ஸில்  கை நீட்டி  கொண்டிருக்க கூடும் .அல்லது அவனுக்கு  அவளை வைத்து காப்பாற்ற உடலில் வலு இல்லாது இருக்கும். ஏதோ ஒரு கொடிய ஏழை  நோயோ ஊனமோ அவனை முடக்கி போட்டிருக்க கூடும்.ஆனால்  அதை என் அறிவு  ஏற்க மறுத்தது ஒரு பெண்ணை தாயாக்கும்  அளவிற்கு பராக்கிரமம் பெற்ற ஒருவன் ஒரு பெண்னை வைத்து காப்பாற்ற முடியாதா ? இயலா விட்டால் ஏன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் ?

ஒரு வகையில் அவள்  மீது திணிக்கபட்டு இருப்பதும் பெரிய  வன்முறை தான்  இது. செக்ஸ் என்ற ஒன்றின் மூலம் அவள் குழந்தை பெற்றது நிச்சையமாக பிச்சை எடுப்பதற்காகக இருக்காது .  என்னை பொறுத்த வரை வயிற்றையும் பசியையும் போல் அவளின் குழந்தையும் தாய்ப்பாசமும் அவள் உடல் மீதும் மனம் மீதும் நிகழ்த்தப்பட்ட  ஒரு பெரும் வன்முறை. அதை அவள் சகித்து கொண்டாலும் ஏற்று கொண்டாலும் அது வன்முறை தான். ஒரு ஆண் ஒரு பெண்மீது செய்யும் பாலியல் வன்முறைகளில் இதுவும் தலையானது.

ஒப்பீட்டளவில் பெண்ணை ஆணை விட உடலளவில் வலிமை குன்றியவளாகவே இயற்கையும் சமுகமும் படைத்துள்ளன. ஆனால்  ஆண் உடலை விட வலி சூழ்ந்த சதை துணுக்குகளை கொண்டது பெண்ணுடல். பிரசவம் , மாதவிடாய், தொடக்கம் மனித புணர்ச்சியின் போது கூட பெண்ணுடல் வலி மிகுந்த ஒன்றாகவே உழல்கின்றது. இயற்கையால் இவ்வாறு வஞ்சிக்கப்பட்ட பெண்ணுடல்  எதிர் பாலினத்தால்  இன்னும் இன்னும் வஞ்சிக்க படுகின்றது.அதுவும்  நம் சமூக இருப்பும் ஆண் வர்க்கமும் பெண் உடல் மீதும் பெண் மனத்தின்மீதும் நிகழ்த்தும் வன்முறைகள்  மிகப்பார தூரமானவை மட்டுமன்றி வித்த்தியாவின் மீது நிகழ்த்த பட்ட  அநீதியின் ஆணி வேர் ,பக்க வேர்களாகவும் இவை யே காணப்படுகின்றன.


எனக்கு தெரிந்து புறவயமாக  பெண் உடல் மீது  அவள் சிறுமியாக இருக்கும் போதே வன்முறை  தொடங்கி விடுகின்றது. சமீபத்தில் 7 வயது சிறுமி மீது நிகழ்த்தப்பட கொடூரத்தை இங்கே  ஞாபக படுத்து கிறேன்.இது போன்ற சட்டம் போட்டு தண்டிக்க பட கூடி வன்முறையை அநேகமாக அடையாளம்  காணலாம்  வக்கிரம் மிக ஏறிய  மிருகமாகவே மாறி விட்ட ஆண் தன் சுய புத்தியின் துணையோடு இவ்வாறான ஈனச் செயல்களை நிகழ்த்துகின்றான். இது பற்றி நாம்  நிறையவே பேசியிருக்கிறோம்  விமர்சித்தும் இருக்கிறோம். ஆனால்  வெளியறியப் படாமல்  அகவயமாக பெண் உடல் மீதும் மனம் மீதும் அநீதியிழைகின்றது. அவள்  பருவடைந்த பின் நம் சமூகம்  மிக இயல்பாக  பெண் இலக்கணம் எனற பெயரில் ஆணிற்கு அஞ்சுதலும் அடங்கி போதலும் பற்றி அப்பெண்ணின் தாயினதும் சாகோதரியினதும் தொடர்ச்சியாக போதிக்கின்றது.
பெண்பிள்ளை என்றால் இப்படிதான்  கட்டுபாடு ஆண் பிள்ளையெனின் எப்படியும் வாழலாம் .இந்த அடிப்படை  தான் விஸ்வரூபம் எடுத்து பின்னாளில் பெண்ணுடலை ரணமாக்கி விடுகின்றது.

மிகச்சாதாரண உதாரணம் ஒன்று சொல்கிறேன்
ஒரு பெண் பிள்ளை  தன் தாய் தந்தை முன்பும் தன் உடைகள் விலகாமல்  பார்த்து கொள்ள வேண்டும். சட்டை  இறுக்கமாகவும் இயல்பாகவும் இருந்தால் கூட  பெண்பிள்ளை நெஞ்சை பிடித்து கொண்ட பின்பே  குனிந்து ஒரு பொருளை எடுக்கிறாள். இதை எங்காவது பார்க்கும்போது எனக்கு எரிச்சலாக  வரும் இந்த பழக்கம்  என்போன்ற ஆண்களின் கண்களாலும் செய்த செய்யும்  வக்கிர மனங்களாலும் ஏற்பட்டது தானே. அதாவது ஒரு பெண்ணின் இயல்பை நம்  கண்கள் கொண்டு மாற்றியமைக்கின்றோம்.

 அடுத்தது காதல் –காமம்

சாரு நிவேதிதா சொல்வது போல் தற்காலத்தில்  ஒரு பெண்ணிடம்  ஒரு ஆண் சொல்லும் மிக அபத்தமான வார்த்தை I LOVE U என்பது தான். ஏனெனில்  காதல் என்னும் அன்புநிலைமாற்றம் பெண் மனவுடல் மீது  தெரிந்தும் தெரியாமலும் ஆற்றும் வன்முறை மிக அதிகமான  நகை முரண்களையும் அபத்தங்களையும் கொண்டு இருக்கிறது.

சமீபத்தில்  ஒரு தோழி என்னிடம்

“டேய் அண்டைக்கு அவன்  கோவத்தில  என்ர கன்னதில பாளார் எண்டு அறைஞ்சிட்டு போய்ட்டான் டா. அது எனக்கு பிடிச்சுது .அவன் என்னை உரிமையா  அதிகாரம் பண்ணுறான் ”

எனக்கு கொஞ்சம்  அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. மேலோட்டமாகவும்  ஒரு காதலியாகவும் நின்று பார்க்கும் போது அங்கே  பெண் மீது இளைக்கப்படும் வன்முறை அன்பு என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது .ஆனால் ஒரு ஆண் மனதளத்திலோ அல்லது பெண் உடல் தளத்திலோ அது மிக மோசமான அடக்குமுறையின் தொடக்கப்புள்ளி.
இது காமத்திலும் நிகழ்கின்றது, நம் சமூக பெண்களில் 90 %  பேர்  சிறுவயதில் இருந்தே காமம்  தொடர்பிலும் பால்நிலையியல் இருத்தல் தொடர்பிலும் மிகுந்த பிரக்ஞை யும் கட்டுபாடுகளும் உள்ளவர்களாக வளர்க்க படுகின்றனர். குறிப்பாக ஆண்களை போலன்றி உணர்வு நிலை  , விருப்பு வெறுப்புக்கள் தொடர்பில் மிகுந்த கட்டுபாடுகளை தம் உடலை சுற்றி ஏற்படுத்தி கொள்கின்றனர்.ஒரு வகையில் இது இத்துனை கால பெண் அடக்குதலில் வெளிப்பாடு தான். இன்னொரு வகையில் அது மிக ஆபத்தான பால் நிலை சுதந்திரம்  மிக்க ஆண்களை கொண்ட நம் சமூக அமைப்பில் பெண்களை காக்கும்  ஒரு சுய தற்காத்தல் கேடயமாகவும் நிலைக்கின்றது. இதை பெரும்பாலன பெண்கள்  காதல் ,கல்யாணம்  இரண்டில் ஒன்றில் உடைந்து போக அனுமதிக்கின்றனர்.
இது மிக இயல்பானது தானே என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் இன்று அவ் நெகிழ்ச்சியை ஆண்கள் மிகச்சாதரணமாக தமக்கு ,தம் இச்சைகளுக்கு  சாத்திய மாக்கி விடுக்கின்றனர்.

என் காதில் விழுந்த சமீபத்திய உரையாடல்  குறிப்பொன்றை தருகிறேன்

“மச்சி பெட்டையள மடக்கிறது ஒரு விசயமே இல்லயடா .லவ் பண்ண வச்சிட்டா சரி. என்னில நம்பிக்கையில்ல யாடி எண்டு தொடங்கோணும் அவ்வளவு தான் ”

இதற்கு பிறகு நிகழத்தக்க அபத்தங்களை நீங்களே ஊகித்து கொள்ளுங்கள்.பெண்மனம் புரிந்து கொள்ள முடியாதவொன்று என்று சொல்லிய ஆண் வர்க்கம்  எப்போதோ வழக்கொழிந்து விட்டது. பெண் தன்னை சுற்றிஉண்டாக்கும் எல்லா வேலிகளின் பலவீனங்களும் மிகதுல்லியமாக அறிந்த ஆண் வர்க்கம்  இன்று உள்ளது. இணையமும் சமூக தொடர்பும் ஆண்களுக்கு அறிவு ரீதியான  பல  சாமர்த்தியங்களை தாரளமாக வழங்குகின்றது, கொடுக்க பட்டு இருக்கும் அறிவையும் ,சுதந்திரத்தையும் பெண் உடலை புசிப்பதற்கும் பொம்மையாக்கவும்   பல ஆண்மனங்கள் பழக்கப்படுகின்றன.

சமீபத்தில் ஒரு தொலைபேசி உரையாடல் ஒன்றை கேட்டேன். ஒரு இளைஞன் தன் முன்னால்  காதலியை நீ என்னுடன் இருந்த படம்  எல்லாம் வச்சிருக்கன்,நெட்ல போட்டுவிடுவேன், வருங்கால கணவனுக்கு அனுப்புவேன் என்று மிரட்டுகின்றான்.
அவள்  பிடிக்காமல்  விலகியது அவளில் தனிப்பட்ட விடயம். இந்த உரையாடல் லிங்கை இணையத்தின் பல பேஸ்புக் போராளிகள் ஷேர் செய்து இருந்தார்கள். ஏமாற்றியவள் தண்டிக்க பட்டே ஆக வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறது ஆண்மனம். ஒரு வேளை அந்த பெண் அவர்களின் சகோதரியாக  இருக்கும் பட்சத்தில் அவர்களின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் ?
இது சமீபத்திய ஆண்மனங்களின் சில  உதாரணக்கள் தான்  காதல் அன்பு  என்பது பெண் உடலை அடிமை செய்யும் ஒன்றாக மாறிவிட்டது.இது  தீடீரென தோன்றிய  ஒன்றல்ல இவை  இத்துனை வருட ஆண்மனத்தின்  அப்டேடட்  வேசன் கள் அவ்வளவே.
ஏன் திருமணத்தை கூட எடுத்து கொள்ளுங்கள்  பெரும்பாலான விவாகரத்துக்கள் ஆண்களிலேயே ஆராம்பிக்கின்றன. இல்லை நான் என் மனைவியை விவாகரத்து செய்யாமல் தான் இருக்கிறேன்,நன்றாக குடும்பம் நடத்து கிறேன்  என்பவர்கள் சிலரிடம் அவர்களின் மனைவியின் மார்புகளில் இருக்கும்  சிகரட் புண்களுக்கு விளக்கம் கேட்க வேண்டும்.

இவை எல்லாம்  சொல்லும் போதும் கேட்கும் போது நமக்கு அருவருப்பாகவோ  அபத்தமாகவோ தோன்றும். இன்று சிருஷ்டியின் மூலம் என்றும் தெய்வம் என்றும் அம்மன் கோவில்களிலும் மாதா கோவில்களிலும் மண்டியிடும் எல்லா ஆண்களுமே  தெரிந்தோ தெரியாமலோ பாவமன்னிப்பே  அற்ற பெணுடல் –மனம் மீதான  வன்முறையை செய்தவர்கள் தான்.  புரிதல் பாலியல், சுதந்திரம் ,சமத்துவம், பெண்ணியம்  இது எல்லாம்  மேடை போட்டு சோல்லி ஏற்படுத்த கூடியதல்ல.எல்லாமே  ஒவ்வொரு தனி மனிதனின் அக நிலையில் இருந்து தொடங்கப்பட வேண்டிய  மாற்றம். பெண் உடல்மீதான ஆண்மனமும் ஆண்மீதான பெண்ணுடலும் மனமும்  வஞ்சமற்ற புரிதலும் அன்பும்  சமதளத்தில் இயங்க எப்போது சந்தித்து கொள்ள போகின்றதோ அந்த இடத்தில் இருந்து இத்துனை ஆயிரம்  வருட பெண்மனவுடலின் சாபம் மெல்ல அனல் அடங்கும்.

இப்படி எல்லாம் நான் சொல்வது நான்  எந்த வன்முறையும் இழைக்காத  சுத்தமானவன் என்பதற்காகவோ  அல்லது குறிப்பாக ஆண்கள் மீது நான்  சுமத்தும் குற்ற பத்திரிக்கையோ பெண்ணிய போராட்டமோ அல்ல  ,

இது என்னுடைய எளிமையான; உண்மையான ;ஒரு
ஒப்புதல் வாக்குமூலம்.

- யதார்த்தன்
30.05.2015


வெள்ளி, 15 மே, 2015

Posted by விகாரன் On 6:42 AM




01.

”என்னை எங்கையாச்சும்  கூட்டிக்கொண்டு போடா இங்க இருக்க எனக்கு பிடிக்கேல “

அன்றுதான்  அவள்  வழமையை விட அதிகம் என்னிடம் உரிமை எடுத்துகொண்டாள். உள்ளூர ஒரு மெல்லிய மகிழ்வு கசிய தொடங்கியதை நான் உணர ஆரம்பித்தேன்.

எங்க கூட்டிகொண்டு போறது ?

எங்கையாவது தூரமா  .அங்க ஒருத்தரும் இருக்க கூடாது
நானும் நீயும் மட்டும் போதும்

“ம்ம்”

“என்னடா உம் கொட்டுற கூட்டிகொண்டு போ ”

சரி வா

“எங்க போறம் ?”

”தீவுக்கு ”

”தீவா ? எங்க இருக்கு ? “

”கடலுக்கு நடுவில ”

”டேய்  மாடு  என்ன ஜோக்கா ?  .தீவு எண்டா  கடலுக்கு நடுவில இருக்கும் எண்டு எனக்கும் தெரியும்.

“அப்ப ஏன்  கேட்டனி ?”

“சரி விடு நான் போறன் .”

“உடனே  மூக்கு மொளகா  ஆகிடும் மேடத்துக்கு ”

“ம்ம்”

“சரி வா  செல்லம்  போகலாம்”

“செல்லம் எண்டு சொல்லாத ”

“ம்ம் சொறி ….வா  போவம்”

சொறியும் சொல்லாத ..ம்ம்  வா


.02.

  “அடி கடற்கரை எப்பிடி இருக்கு ?

“ம்ம்  நல்லா  இருக்கு  ?”

சரி  தீவுக்கு போவம்

 “எப்பிடி நீந்தியா ? “

“இல்ல  போட்  இருக்கு  ”

”ஓ..எங்க ? “

“அங்க பார் அந்த பக்கம்  ”

“சின்னனா  இருக்கு பாய் எல்லாம்  கட்டி கிடக்கு ”

“ம்ம் பாய் விரிச்சு தான்  ஓடுறது”

“காத்தடிக்காட்டி  ?”

“துடுப்பு கிடக்கு ”

ஓ ….எனக்கு கடல் எண்டா பயம்
“எனக்கும்  தான் ”

உனகென்ன பயம் நீதான்  தீவுக்கு எல்லாம் போறியே .
போறனான் இருந்தாலும் பயம். கடல் வேற உலகம்.உலகத்தில நீர் பரப்பை விட நில பரப்பு தான் கூட .அதான் பயம். கிரிசாந்திட ஒரு கவிதை இருக்கு

என்ன கவிதை ?

“கடல் தண்ணீராலும்
 உப்பாலும் ஆனதல்ல
 கடல் கடலாலானது”


 “இப்ப நீ எனக்கு ஜோகிறபி கிளாஸ் எடுக்க போறியா இல்ல தீவுக்கு கூட்டி கொண்டு பொக போறியா ?”

“சரி வா போட்ல ஏறு”

”கைய குடுடி ”

”இல்லவேண்டாம்  ”

”சொன்னா கேக்கிறியா ? பார் விழுந்திட்ட ”

“பொடா பார்  நான்  நனனஞ்சிட்டன்”

வா துக்கி விடுறன்.

இல்ல வேண்டாம் நான் எறீட்டன்.

ம்ம்ஹிம்
.
"காத்து இல்ல நான் துடுப்பு போடுறன்  நீ கதைச்சிட்டு வா  எனக்கு களைப்பு தெரியாது."

தீவு எப்பிடி இருக்கும் ?

“சின்ன தீவு ”

“ஓ பேர் என்ன  ?”

“புரவித்தீவு”

“புரவி ந்னா குதிரை தானே ?”

“ம்ம்”

“எனக்கு குதிரைல ஏறோணும்ந்னு ஆசை ”

“தெரியும்”

அங்க குதிரை இருக்கா ?

“ம்ம் நிறைய ..என்னட்டயும் ஒண்டு இருக்கு ”

“புழுகாதை”

“ம்ம்ம்”

 “வேற என்ன இருக்கு ? “

 “ஒரு ஆறு  ஒரு போட்  ஹவுஸ் ”

 “போட் ஹவுசா ? “

 “ம்ம் ”

டேய்  கேரளால  இருக்குமே அது போலயா ?

“ம்ம்”

“ஐ …எனக்கு பிடிக்கும்”

“தெரியும் ”

 “போடா உனக்கு எல்லாம்  தெரியும்..புழுகன் “

 “ஹா ஹா “


03

 “ஏய் …தீவு வந்திட்டு இறங்கு “

“அதுக்குள்ளயா ? ”

“தூங்கு மூஞ்சி ”

”அச்சோ   நித்திரை ஆகிட்டனா ? ”

”ம்ம் மழை வாற மாதிரி கிடக்கு டி “

“ஐ மழை,…… எனக்கு பிடிக்கும்”

“அதுவும்  தெ…….. சரி விடு”


என்ன சொல்ல வந்த?
“தெரியும் ந்னு”

”சரி முறைக்காத  வா வேகமா போகலாம்  போட் ஹவுஸ் க்கு ”

 “போ நான் வரேல்ல   மழைல நனைய போறன். “

”அங்கையும் மழை  வரும்  நனையலாம் ”

 “என்னால நடக்கேலா .குதிரை வச்சிருக்கிறன் எண்டு புழுகின தானே .எங்க கூப்பிடு பாக்கலாம். “


“என்னடா கூப்பிட சொன்னா  என்ன செய்ற”

 “விசில் அடிக்கிறன் டி”

”எதுக்கு ?”

ஜலாலுக்கு .

ஜலாலா ?

“ம்ம்  ஜலாலுதீன்”

“ஓ உன் குதிரைக்கு பேரோ  ?”

 “ம்ம் “

”அதென்ன கேள்  குதிரையா ?”

”ஜலாலுதீன் ஆம்பிள பேர் “

இல்ல  விசில் அடிச்சியே அதான் கெட்டன்

”மட்டமான  கொமடி”

”போடா  போடா “

 “பார்  என் ஜலால “

”வெள்ளை குதிரை அழகா இருக்கு டா “

”ம்ம்”

”ஏத்தி விடு …இல்ல இல்லவேணாம்  நானே  ஏறுறன்.”

“இளவரசி தங்கள்  சேவகன் ஏற்றி விடுகிறேன்  பிறகு விழுந்து முஞ்சை முகரை எல்லாம்  உடைந்தால்  அடியேன்  மனமுடைந்து போவேன்”

“ஹா ஹா….சரி ஏற்றி தொலையும்”

”பாத்தியா எப்பிடி ஜம்முன்னு ஏறிடன்”

”ஹிம் தள்ளி இரு நானும் ஏறோணும்”
“மாட்டன்  போடா”

“இதென்ன கொடுமை நான் என்னெண்டு வாறது ?”
“நீ நடந்து வா ”

”பொச்சுடா உனக்கு வழி தெரியாதுடி ”

”சொல்லு நான் போறன் .”

”இல்ல நான் வரோணும்”
“ம்ம்ம்ம்  சரி”

04

“முட்டாம இரு உன் குதிரையை மெல்லமா  போக சொல்லு”

”மழை எப்படா வரும் ?”

”சொறி வருணபகவான் நம் பர் இல்லை என்னட்ட”

“ஹிம் போடா”

”போட் ஹவுஸ் எப்பாடா வரும் ?”

“அந்தா  ஆறு தெரியுதா ?”

”ஓ  நல்ல அகலம் மகாவலி மாதிரி இருக்கு”

”அந்த வளைவில பார் நிக்குது ”

”ஓ …சின்னனா தான்  தெரியுது  எப்பிடி இருக்கும்  ? “

”மூங்கிலால வளச்சு ஆர்ட்  வேர்க் பண்ணி இருக்கும்”

”உள்ள மூண்டு அறை போல செட்டப்பண்ணி  இருக்கு. ஒரு அறை கிச்சின்”

”இன்னொரு அறை கோல் பொல”

”மற்றது பெட் றூம் ”

” பெயிண்டிங்ஸ் இருகும் “

”என்ன பெயிண்டிங் ? “

”டாவின்சிட.. வான்கோட “

”என்ன மோனாலிசாவா ? ”

 “ம்ம் “

”வான்கோ யாரு  ? “

”பெயிண்டர் ”

”நான் என்ன ரைவர்  எண்டா சொன்னன். எருமை .”

”அவரும் ஒரு பெய்ண்டர்டி பேமசானவர். காதலிக்கு காதை வெட்டி குடுத்தவர்.”

”உனக்கு எப்ப பாத்தாலும்  காதல்…மண்ணாங்கட்டி….எல்லாரும்   லூசு பயலுகள் தான். “

”ஹா ஹா “

”ஏண்டி காதல் ந்னா  இப்பிடி வெறுப்பு உனக்கு ? “

”99 %  மான  காதல் பொய் தாண்டா..வேஸ்டு “

“சரி விடு ”

“மழை எப்படா வரும் ?”

 “வானம்  நல்லா இறங்கி வந்திட்டு நாங்கள்  போட் கவுஸ் போக முதல் வந்திடும்”

“ஐ தூறுது பாத்தியா நான்  சொன்ன உடனே வந்திட்டு”...

“பெய்யென பெய்யும் மழை”

என்னாடா  விளங்கேல ?

கவிதை

”ஆரம்பிக்காத உன் கவிதை கத்தரிக்கா எல்லாத்தையும் .


05

.குதிரையை  நிப்பாட்டு”

“ஏன் ?”

 “ஆத்தில குளிக்க போறன் “
”நீ கரைல நில் ஆறு ஆளமோ ?”

“இல்ல பயபடாம இறங்கு ”

 “என்னடா ஒரே புல்லா கிடக்கு ? “

 “அது சம்பு புல்லும் ஆம்பலும் ”

 “ஆம்பல் ? “

 “பூ “

”நான் குளிக்கிறன் ஆஞ்சு தா…..மழை பிலத்திட்டு ஐயா ஜாலி “
 “டேய் என்னடா தண்ணி சுடுது “

”மழை பெய்யேக்க ஆத்து தண்ணி சுடுற போல தான் இருக்கும்டி”

”ஏன்?”

”ஏன்னா  மழை தண்ணீ ஆத்து தண்ணியை விட வெப்ப நிலை குறஞ்சது அதால மழை பெய்யும் போது ஆத்து தண்னி சுடுற மாதிரி இருக்கும் “

“ஹிம்  இப்ப சயன்ஸ் கிளாஸ் ”

“சரி குளி  இண்டைக்காச்சும்”

“நீ ஆம்பல் புடுங்கி தா ”

”இந்தா தலயில வச்சு கோ”

”ஓகே…ஐஸ் கிறீம்  கிடைக்குமா ? “

“ஹிம் தண்னிதான் கிடைக்கும் அள்ளி குடி”

 “போடா நான் பரநாட்டிய  முத்திரை பிடிச்சு  நிக்க போறன். “

”ம்ம் “

 “நான்  எப்பிடி இருக்கன்”

“ஈரமா”

”போடா பண்ணி இரசனை கெட்டவனே”

 “சரி உண்மை சொல்லவா பொய் சொல்லவா ?”

”பொய் “

”அப்பிடின்னா சரி ஒரு சின்ன  நரேசன்  குடுக்கிறன் .”

”இடுப்பளவு தண்னீர் ல வெள்ளை சுடிதார் போட்டு ….ஆம்பல் சொருகின நீளமுடி ஈரமாகி மழை தண்ணீர்  சொட்டச்சொட்ட ஒவ்வொரு மின்னல்  வெட்டும் போதும் அந்த வெள்ளை ஒளில நீ ஒரு  ஒரு கடல் தேவதை போல இருக்க ..ஒரு திறி டி  பெயிண்டிங் மாதிரி  நிக்கிற…”

“ம்ம்ம்ம்ம்”
”……..”
”காணும் உன்ர பொய் ”

 “இப்ப உண்மை சொல்லட்டா ?”

” ம்ம் சொல்லு “

 “ரொம்ப நேரம்  இப்பிடியே நனைஞ்சா காய்ச்சல் வந்திடும்  வா  போவம் “

“கிரகம்  பிடிச்சவனே  போடா  …”


06

 “ ஹஹா “

 “சிரிக்காத வா  போட் கவுசுக்கு போவம் “

 “ம்ம் வா ”

 “நல்லா இருக்குடா  அழகா  வச்சிருக்க ”
 “ம்ம் தாங்ஸ் “

 “எனக்கு ரெஸ் மாத்தணும் . “

 “அந்த அறைக்க  இருக்கு போய் மாத்திட்டு வா ..நான் உனக்கு டி போடுறன். “

“ஓகே”

 “:என்னடா  எல்லாம் வைட் ரெஸ்சா  வங்கி வச்சிருக்க .உன் ஆளுக்கா …? “

”ம்ம் “

”ஏன்  உன் ஆளுக்கும் வைட் தான் பிடிக்குமா ? “

 “ம்ம்ம் “

 “சரி  ம்ம்ம்ம் கொட்டாம  டீ ய குடு “

”இந்தா “

“கை கால் எல்லாம்  நடுங்குதுடா”

”ம்ம்  நெருப்பு  தணல் தரட்டா ?”

”வேணாம் நீ யே  தேய்ச்சு விடு”

 “இல்ல  தணல் தாறன் “

”டேய் தேய்ச்சு விடு எண்டா தேய்சு விடு இல்லாட்டி விடு நா தாங்கிப்பன் “

 “நீதான்  கிட்ட வரவே  விட மாட்டியே இப்ப மட்டும் என்ன ? “
 “சரி நான்  போறன் போ “

“இந்த ஈகோ தான் டி பிரச்சினை  உனக்கு “

“நான்  ஒண்டும் ஈகோ இல்ல “

 “சரி விடு “

“விடேலாது”

”இப்ப என்ன செய்யோணும் ? “

”எல்லாரும் இப்பிடி தான் டா  “

 “என் பிரச்சினையை என்னோட மட்டும் கதை “

”நான் என்ன  இப்ப உன்னொட  பிரச்சினையா செய்யிறன் ? “

 “ஹிம் “

”என்ன ஹிம் ”

”அடி… “

 “என்ன…?.”


 “சொறி “

”தெவையில்ல “

”ம்ம் “

”நீ டீ  குடிக்கல “

”வேண்டாம்”

 “ம்ம் “

”சொறி “

”எதுக்கு ? “

 “இப்ப கட்டாயம் சொல்லணுமாடா உனக்கு காரணம் ?”

”ம்ம்”

”ம்ம்”
”அடி ஒண்டு கேக்கவா ?”

ம்ம்

”உலகத்துக 99%  லவ் பொய் எண்டு  சொல்லுவ தானே ..?? “

”ம்ம்ம்ம்”

 “நாம அந்த 1 % மா  இருக்கலாமா ? “

…….
………
………..
……
…….
”அம்மா கூப்பிர்ரா நான் பிறகு chat பண்ணுறன் பாய்”

”ஏய் பதில் சொல்லிட்டு போ”

பதில் அனுப்பியிருந்தாள்

ஒற்றை ஸ்மைலி

 :)

சார்ச் அற்றவென் அன்ரோய்ட் போன்  மெல்ல அணைந்தது.


-யதார்த்தன் :)